Search This Blog

Wednesday, November 30, 2011

போதி தர்மரா ? போலி தர்மரா ?

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குழுமம், 7ஆம் அறிவு திரைப்பட போதி தர்மாவை பற்றி ஆய்நது பல விவாதங்கள் நடத்தி வருகின்றன. நண்பர்களுக்காக தொகுத்துள்ளேன். போதி தர்மர் குறித்து இந்தியாவில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. ஆனால் சில விஷயங்களை நாம் இணைத்துப் பார்க்கும்போது சில மறைமுக விஷயங்கள் புலப்படலாம். போதி தர்மரின் ஆண்டு கி.பி நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு என வைத்துப் பார்க்கும்போது, நாம் காஞ்சிபுரத்தின் இருப்பை சற்றுப் பார்க்கவேண்டும். தொண்டை மண்டலத்தில்தான் காஞ்சி இருந்தாலும் தமிழ் அங்கே சிறப்புறவில்லை என்பதும், வடமொழிப் புலமைதான் சிறந்தோங்கியது என்பதும் தெள்ளிடை மலை. நகரேஷு காஞ்சி - நகரங்களில் சிறந்தது காஞ்சி என பெயர் வரக் காரணமும் காஞ்சிக் கடிகையே. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு காஞ்சியின் வீதிகளையும், அப்போதைய செல்வத்தையும் வர்ணித்த கண்ணனார், இளந்திரையன் ஆட்சி செய்த காஞ்சி அப்போதைய மிகப் பெரிய கல்வி நகராக பெயர் பெற்றிருந்ததாகவும், காஞ்சியில் பல்வேறுபட்ட இனத்தார்களும், மதங்களும் இருந்ததாக மிகப் பெரிய குறிப்பு ஒன்றினை ‘பெரும்பாணாற்றுப் படை’ மூலமாக நமக்குத் தருகிறார். இளந்திரையன் ஆட்சிக்குப் பிறகு காஞ்சியில் பல்லவர் காலம் வந்தது. முற்காலப் பல்லவர்களும் காஞ்சியை ஒரு மிகப் பெரிய கல்வித்தலமாக வைத்திருந்தனர். பல்வேறுபட்ட மன்னர்கள் இந்தக் கடிகையில் கல்வி கற்றதாகவும், அப்படிக் கற்றுக் கொள்ளும்போது மதங்களின், வர்ணங்களின் பேதங்கள் வாதாடப்படுவதும் முக்கியமான கல்வி நிலை என்றும் தெரிய வருகிறது. தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசன் தனகேதுவாக வந்த ஒரு சந்தர்ப்பத்தினால் கர்நாடகத்தில் தென்பகுதியை அரசள்கிறான். அவன் பெயர் கடம்ப சர்மா. ஆனால் சர்மாக்கள் - பிராம்மணர்கள் அரசாளும் உரிமை இல்லாதவர் என்பதற்காக, காஞ்சிக் கடிகையில் மிகப் பெரிய வாதம் நடைபெற்றது. காஞ்சியில் உள்ள பிராம்மண பண்டிட்டுகளும், மற்ற சத்திரியர்களும் கடம்ப சர்மாவின் ஆளுமையை ஒத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு காஞ்சிக் கடிகையில் உரிமை மறுக்கப்படுகிறது. அவன் காஞ்சியில் வந்திறங்கியவுடன், தான் குலத்தால் ஒரு படி இறங்க ஒப்புக் கொள்வதாகவும், இனித் தன் பெயர் கடம்ப சர்மா இல்லை, கடம்ப வர்மா எனவும் ய்க்ஞ வேள்வியின் முன்பு தாரை வார்த்து மாறுகிறான். - இதைப் பற்றிய குறிப்புகள் கடம்பர் வரலாறிலும் தெலுங்கு சரித்திரப் புலமையாளர் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன. காஞ்சியில் போதி தர்மர் இருந்தாரா என்றதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் க்டம்ப சர்மா, கடம்ப வர்மா ஆனதைப் போல, மேற்கண்ட நிகழ்ச்சிகள் எத்தனையோ காஞ்சி நகரில் நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழு போதி தர்மர் பற்றியதாக இருக்கலாம். போதி தர்மர் தமிழரா என்றால் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. (விவரம் கிடைக்கவில்லை). களப்பிரரா என்றால் இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது (பிறகு களப்பிரார் யார் எனக் கேள்வி வரும்). களப்பிரர் ஒரு முக்கியப் பிரிவினர் புத்த தர்மத்தை மிக அதிகமான அளவில் பரப்பி இருந்ததாகவும், அச்சுத களப்ப ராயன் என்போன் காலத்தில் அவன் தமிழகத்தை ஆண்டபோது புத்த மதச் செழிப்பைப் பற்றி பாலி மொழியில் ஒரு காவியம் படைக்கப்பட்டுள்ளது, இந்தக் காவியத்தில் உறையூர் நகரச் சிறப்பைப் பற்றிக் கூட பாடல்கள் உண்டு. இப்படிப் பட்ட சமயத்தில் ஏதேனும் இளவரசர், அல்லது அரச குரு போன்றோர் கீழை நாடுகளுக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உண்டு.(திவாகர், வரலாற்று அறிஞர், விசாகப்பட்டிணம்) வீக்கிபீடியாவில் போதி தர்மா - - - போதிதருமர் - ஜென் நெறியின் தலைமகன் (தமிழன்) - - - போதிதருமர் அருங்காட்சிப் பொருட்கள் - - - போதிதருமரின் கடல்வழிச்செலவு - - - போதி தர்மாவின் அமெரிக்க செய்தி - - -

பாவம் தமிழன் : பழ. நெடுமாறன்

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள். அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார். தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது. உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது. 2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை. 1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும். இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும். அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும். தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள். நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது. முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும். அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது. கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும். இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார். காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன. பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும். புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும். தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது. பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்? மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது. புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003): தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது. ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன். பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள். இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன். (நன்றி: தினமணி)

Monday, November 28, 2011

பாலை : : : திரைப்பட விமர்சனம்

தமிழர்களின் பண்டைய காலத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதையும் தாண்டி தமிழர்கள் மறந்த உணர்வை சுண்டி இழுக்கிறது பாலை.. தமிழர்கள் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு உண்ண, தூங்க மட்டுமே தெரியும் என்று தான் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் இங்கு சில மக்கள் வாழ்ந்தார்கள் அவர்களுக்கு உடுக்க உடை செய்ய தெரியும், குடிசை வீடு கட்டி வாழ்ந்தார்கள் என படம் ஆரம்பமாகிறது. பிழைப்போமா? சாவோமா? என தெரியாது ஆனால் வாழ்ந்ததற்கான ஒரு பதிவு செய்கிறேன் என காயம்பு எனும் பாலை நிலத்து பெண் ஒருத்தியின் பார்வையில் கதை சொல்லபடுகிறது. செழிப்பான சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் மக்கள் ஒரு வறண்ட பகுதியில் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். அமைதியாய் போய் கொண்டிருக்கும் அவர்களது வாழ்வில் மீண்டும் புயலாய் பிரச்சனை கிளம்புகிறது. பலமானவர்கள் பலகீனகாரர்களை அடித்தால் அமைதியாக தான் போவார்கள், பலகீனமானவர்கள் பலம் பெற்றால் பலமானவர்களுடன் சண்டை போடுவார்கள் அதைபோல சொந்த மண்ணிலிருந்து விரட்டியவர்களின் மாட்டு வண்டி பாலை நிலத்தை கடக்கும் போது அங்கிருக்கும் இளைஞர்கள் அதை மடக்குகிறார்கள், அதில் ஒருவன் பலி ஆகிறான். இதனால் பிரச்சனை பெரிதாக கூடாது என்று பாலை நில தலைவன் சமாதானம் பேச போகும் இடத்தில் வளன் எனும் இளைஞன் அடிமையாக்கப்பட்டு மற்றொரு இளைஞன் கொல்லப்படுகிறான். சமாதானம் சண்டையில் முடிந்து பிரச்சனை பெரிதாகிறது. பாலை நிலத்து மக்கள் வளனை காப்பாற்றினார்களா என்பது தான் மீதி கதை. உடன்போக்கு, வந்தேறிகள் என்றெல்லாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிற தமிழர்கள் மறந்து போன தமிழ் வார்த்தைகளை நினைவூட்டுகிறது. பத்து அடி தூரத்தில் வருவது யார் என்று தெரியாமல் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் எத்தனை பேர் வருகிறார்கள் என்று தரையில் காது வைத்து காலடி சத்தத்தால் கண்டு பிடிப்பது , நேரத்தை கணக்கிட செம்மண்ணால் ஆன தொட்டியில் தண்ணீர் ஊற்றி பார்ப்பது, போருக்கு தீயை பயன்படுத்துவது, அனைவரும் கூட்டமாக உட்கார்ந்து பானம் குடிப்பது , தொலைதொடர்பு இல்லாத காலத்தில் புகையின் மூலம் பேசிக்கொள்வது என ஒவ்வொரு விசயத்தையும் தேடி தேடி செய்து இருக்கிறார் இயக்குனர் செந்தமிழன். பெயருக்கு ஏற்றார் போல் தமிழ் உணர்வை பதிவு செய்துள்ளார் . பாலை திரைப்படத்தின் சிறப்பு வீடியோ

Saturday, November 26, 2011

தமிழை, தமிழனை நேசித்த ஒரே வடநாட்டுத் தலைவர்

அரசியலில் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடிப்பவர் களுக்குச் சோதனைகள் அதிகமாகவே இருக்கும். வி.பி.சிங்கிற்கும் அப்படித்தான். ஆதரவளித்துவந்த பாரதிய ஜனதா கட்சி தரப்பிலிருந்து நெருக்கடிகள், துணைப்பிரதமர் தேவிலால், சந்திரசேகர், சுப்ரமணியசாமி போன்றவர்களும் வி.பி. சிங்கிற்கு நெருக்கடிகளை உண்டாக்குபவர்களாக இருந்தார்கள். எத்தனை குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் அவர் அது பற்றிக் கலங்காதவராகவே செயல்பட்டார். எது நியாயம் என நினைத்தாரே அதனைச் செயல்பLத்துவதில் உறுதியாகவே இருந்தார். உள்கட்சி நெUக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி அவர் நிகழ்த்திய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். அதனை வலியுறுத்திப் பேசும்போதெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார். தன் அரசைக் கவிழ்க்க முயற்சிப்பது ஏன் என்பதை விளக்கிப் பேசிய அவர், “மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றதுதான் எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்கச் செயல்பட்டனர்.” என்றார். “எனது கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அடைய வேண்டிய இலட்சியத்தை நான் அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது” என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பிரதமர் பதவியைத் துறந்ததுமே தனக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி தெரிவித்த கண்ணியமான மனிதர் வி.பி.சிங். அவரது அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க்களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அவரை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததால் சந்திரசேகரை பிரதமர் பொறுப்பேற்க அழைத்தார் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். தனது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு சந்திரசேகர் பிரதமராகப் பதவியேற்றார் என்றபோதும் அது பற்றிய அரசியல் காழ்ப்புணர்வு ஏதுமின்றி சந்திரசேகரின் பதவியேற்பு விழாவில் தன் மனைவி சீதாசிங்குடன் கலந்து கொண்ட பண்பாளர் வி.பி.சிங். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கும் கலைஞருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் வி.பி.சிங். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய வெற்றிவீரராக அவரைப் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர். எந்த ஊருக்குச் சென்றாலும் வழியெங்கும் கூட்டம் நிறைந்திருந்தது. அவரை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தன் இனிஷியல் ஆங்கிலத்திலும் சிங் என்பது தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த வி.பி.சிங் காரில் பயணித்தபடியே அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிப் பழகினார். தமிழ்மொழியும் தமிழர்களின் அன்பும் அவரைக் கவர்ந்தன. தன் கவிதைகள் தமிழில் வெளிவருவது பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ள வி.பி.சிங் “தமிழக மக்கள் என்மீது நிறைந்த பாசத்தைப் பொழிந்துள்ளனர். அவர்கள் எனக்குக் காட்டும் பாசவுணர்வுக்கு எந்தவொரு பொருளும் மாற்றுப் பரிசாக இருக்க முடியாது. ஆகையால் என்னுடைய ஆழ்ந்த உணர்வுகளை அவர்கள் முன்பு வைக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதோடு தனது தமிழாக்க கவிதை நூலிலிருந்து கிடைக்கும் வருமானத்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்துவிடுமாறு தெரிவித்தார் வி.பி.சிங். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் கலவரங்கள் வெடித்தன. இத்தகைய தொடர் வன்முறைகளால் இந்தியா மதவெறிக்காடாக மாற்றிவிடும் என அச்சம் கொண்டு சாகும்வரை ‘உண்ணாவிரதப் போராட்ட’த்தைத் தொடங்கினார். அவரை எதிர்த்து ‘உண்ணும்விரதம்’ இருந்தனர் மதவாதிகள். தனது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதால் தண்ணீர் கூடக் குடிப்பதை நிறுத்திவிட்டார் வி.பி.சிங். அதனால் சிறுநீரகம் வெளியேறுவது நின்றது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வி.பி.சிங்கின் ஆட்சி யைப் பறித்த மதவாதம் அவரது சிறுநீரகங்களையும் பறித்துவிட்டது. வி.பி.சிங்கிற்கு சிறுநீரகக் கோளாறு என்றதும் துடித்துப் போயினர் தமிழக மக்கள். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்காகத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளைஞர்கள். ஆனால் வி.பி.சிங் “வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று என் ஆயுளை நீட்டித்துக்கொள்ள விரும்பவில்லை. என்மீது அன்பு கொண்டு சிறுநீரகம் தர முன்வந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொன்னதுடன் “அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்” என்றார் இதயம் நெகிழ. 15 ஆண்டுகளாக அவரை வாட்டி வதைத்த நோய்கள் உச்சக்கட்டத்தை எட்டின. 2008 நவம்பர் 27ஆம் நாள் (இன்று) தனது (77 வயது) இறுதி மூச்சுவரை சமூகநீதியையும் மதச்சார்பின்மையையும் இறுகப் பற்றியிருந்த வி. பி. சிங்கின் உயிர் பிரிந்தது. அவர் கொள்கையும் எண்ணமும் வென்றது. (நன்றி-கவின்மீடியா)

Friday, November 25, 2011

பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வி யலையும் வரலாற் றையும் பிரதி பலிக்கும் "பாலை" திரைப் படம் தமிழகமெங்கும் வெளியானது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன. நாம்தமிழர் சீமான் தமிழன் வரலாற்றை தமிழர் வாழ்வியலை சிறப்பாக எடுத்து காட்டி இருக்கும் இத்திரைப்படத்தை தமிழர்கள் நாம் வெற்றி பெற செய்ய வேண்டியது நம் கடமை. இப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டுகளித்து பெரு வெற்றி பெற செய்யுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது… இயக்குநர் தங்கர் பச்சான் ‘இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்’ இயக்குநர் வெ.சேகர் ‘இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்’ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ‘வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்’ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ‘ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட’ ஓவியர் புகழேந்தி மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம், ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் “எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்”

Wednesday, November 23, 2011

கூடங்குளம் போராட்டத்திதை நடத்தும் 3வரின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல்கள்



கூடங்குளம் போராட்டத்திதை நடத்தும் 3வரின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------

உதயகுமார்
--------------------------

இவர் "சாக்கர் மெட்ரிக் பள்ளி' என்ற பள்ளிக் கூடத்தை, கன்னியாகுமரி மாவட்டம், பழவிளை அருகே நடத்தி வருகிறார். அண்மைக் காலமாக போராட்டத்தால், இடிந்தகரை ஆலய வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்.

எஸ்.பி.உதயகுமார் முகவரி: 27, இசங்கன்விளை, மணி வீதி, பறக்கை ரோடு ஜங்ஷன், நாகர்கோவில் - 629 002.
மொபைல் எண்: 98656 83735.
நாகர்கோவில் தொடர்பு எண்: 04652 2406567.
இ-மெயில்: drspudayakumar@yahoo.com, spudayakumar@gmail.com

புஷ்பராயன்
--------------------------

இவர் கிறிஸ்தவ பாதிரியாக இருந்தவர். பின், இல்லற வாழ்க்கைக்கு வந்துவிட்டார். தூத்துக்குடியில் கடல் ஆராய்ச்சி செய்தபடியே கடல்வாணிப தொழில் செய்து வருகிறார்.

புஷ்பராயன் முகவரி: 107/1, 14வது குறுக்குத் தெரு, என்.ஜி.ஓ., காலனி, நெல்லை - 627 007.தூத்துக்குடி முகவரி: 19/1 மனுவேல் ஜேக்கப் லேன், தூத்துக்குடி.அலுவலக முகவரி: 11/106, கேப்டன் குடியிருப்பு, ஆரோக்கியபுரம், முதன்மை சாலை, தூத்துக்குடி.
மொபைல் எண்: 98421 54073
வீட்டு தொலைபேசி எண்: 0461 2361699.
இ-மெயில்: pushparayan@hotmail.com, eastcoast@dataone.in, cpfsouth@gmail.com

மைபா ஜேசுராஜன்
-------------------------------------

நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியில் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார். தமிழர் களம் உள்ளிட்ட அமைப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கிறார். இவரது மொபைல் எண்: 94439 62021.

Monday, November 21, 2011

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் பாலை திரைப்படம் வெளியீடு


2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது.

இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. www.tamilcinema.com இணையத்திலும் நவம்பர் 25 முதல் வெளியாகிறது

Sunday, November 20, 2011

இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் ரயில்



உலகின் மிக்பபெரிய ரயில் பாதை மாஸ்கோ விலிருந்து விளாடி வியஸ்க் வரை உள்ள (9259 கிமீ) ரஷ்ய ரயில் பாதையாகும். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாதை அமைக்கப்பட்டு 'விவேக் எக்ஸ்பிரஸ்' விடப்படவுள்ளது. இந்த ரயில் பாதை தூரம் 4286 கிமீ ஆகும். இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து , அஸ்ஸாமின் திம்ப்பூர் வரை நவம்பர் 26 முதல் செல்கிறது. பயண நேரம் 82.30 மணி நேரமாகும். இந்த ரயில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இந்த ரயில் பாதை உலகின் 8வது பெரிய ரயில்வழியாகும். ஐரோப்பாவில் ரயிலில் பயணம் செய்யும் போதே மலைப்பாக இருக்கும். இந்தியர்களுக்கு இந்த ரயில் பாதை பெரிய வரப்பிரசாதம் தான். அது இருக்கட்டும், தமிழகத்தில் அகல ரயில் பாதைக்காக, பல ரயில் பாதைகள் தோண்டப்பட்டு நிறைவேறாமல் உள்ளது. அதையும் சற்று கவன்ம் செலுத்தினால் நலமாக இருக்கும்.

Monday, November 14, 2011

தொலைக்காட்சி தொழில்நுட்பம் - புத்தக விமர்சனம்

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பொழுதுபோக்கு சாதனங்களில் தொலைக்காட்சி முதன்மையானதாக உள்ளது. இன்று வருமானம் பெருகுகிற பல தொழில்களில் தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளும் இடம் பெருகின்றன. இப்படிப்பட்ட தொலைக்காட்சியை பற்றி மேலோட்டமாக சில தகவல்கள் தெரிந்து இருந்தாலும் நமக்கு பல தகவல்கள் தெரியாது.

”தொலைக்காட்சி தொழில்நுட்பம்” எனும் இத்தமிழ் புத்தகம் தொலைக்காட்சி சந்தைக்கு வந்த போது எப்படி எல்லாம் பார்க்கப்பட்டது. இப்போது தொலைக்காட்சியின் நிலை எவ்வாறு உள்ளது என்றும் ஆரம்பகால கண்டுபிடிப்புகள் அதன் வகைகள் என விளக்கம் அளிக்கிறது. அனலாக் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உள்புறபடப்பிடிப்பு தளம், வெளிப்புற படப்பிடிப்பு தளம், தொலைக்காட்சி நிலையங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி இந்நூல் விளக்கம் அளிக்கிறது.தொலைக்காட்சி தொழில் நுட்பம் பற்றிய இந்த புத்தகம் சாப்ட்வியூ பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. இதன் நூல் ஆசிரியர் தமிழ்தாசன் எளிமையாக விளக்கியுள்ளார். தொலைக்காட்சி தயாரிப்பு முறைகளையும் படப்பிடிப்புக்கு முன்பும் அதற்கு பிறகும் என்னென்ன வேலைகள் நடைபெறுகிறது என்பது போன்ற அடிப்படையான தகவல்களை விளக்கமாக விளக்குகிறது.

ஆசிரியர் பெயர் : திரு. தமிழ்தாசன்
பதிப்பக முகவரி : சாப்ட்வியூ பதிப்பகம். 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை – 29. தொலைபேசி : 23741053,
www.softview.in

விலை : ரூ.60/-
பக்கங்கள் : 80


பிளாக்பெரியா ? பிராடுபெர்ரியா?





கம்ப்யூட்டர் உலகம் நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரையை நண்பர்களுக்காக இத்தளத்தில் பிரசுரிக்கிறேன்.

கம்ப்யூட்டர் வைரஸ் - புத்தக விமர்சனம்


கி.தனவேல் ஐஏஎஸின் வாழ்த்துரை

‘கம்ப்யூட்டர் வைரஸ்’ என்னும் இந்த நூலில் வைரஸ் என்றால் என்ன என்பது பற்றியும், வைரஸிலிருந்து கம்ப்யூட்டர்களை காப்பது எப்படி? கம்ப்யூட்டர்களை பாதிக்கக்கூடிய வைரஸ் வகைகள் என்னென்ன? அவைகளால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மை என்னென்ன? பொதுவாக கம்ப்யூட்டர்களை பராமரிப்பது எப்படி? கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவைகள் எவை? என்பன குறித்து பல பயனுள்ள விவரங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும், செல்பேசி வைரஸ்கள் பற்றியும், பயனுள்ள இணையங்கள் குறித்த விவரங்களையும் கூறியுள்ளார். கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் வகையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.

தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி தமிழ்நாட்டில் கணினி அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில், இத்தகைய நூல்கள் வெளியிடப்படுவது வரவேற்கத்தக்கது.

இளமைக் காலந்தொட்டே நண்பர் மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் கணித்தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு செயலாற்றி வருவதை நான் நன்கு அறிவேன். அவரது இந்த நல்ல முயற்சிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆசிரியர் பெயர் : “கணியரசு” மா.ஆண்டோபீட்டர்
பதிப்பக முகவரி : சாப்ட்வியூ பதிப்பகம். 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை–29
தொலைபேசி : 23741053,wwww.softview.in
விலை : ரூ.60/-
பக்கங்கள் : 80

Thursday, November 10, 2011

தமிழால் நான் உயர்ந்தேன்!! : தினமணி 11 நவம்பர் 2011





கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பது,தமிழ்மென்பொருள்களை வடிவமைப்பது, கணிப்பொறி சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பது எனப் பல்வேறு பணிகளைச் சத்தமில்லாமல் தன்னுடைய சாஃப்ட்வியூ நிறுவனத்தின் மூலம் செய்து வருபவர் மா.ஆண்டோ பீட்டர். கணிப்பொறியியல், இணையத்தில் தமிழ் மொழியை முன்னிறுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரிடம் பேசியதிலிருந்து...

“எனக்குச் சொந்த ஊர், திருச்செந்தூர் மாவட்டம் என்னுடைய தந்தை மார்சிலின் விறகு வியாபாரம் செய்துவந்தார். ஒருகட்டத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடனாளியாகி அதை ஈடுகட்ட முடியாமல் மரணமடைந்தார். அப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். அதன்பின் என்னுடைய சிற்றப்பா தான் என்னை படிக்க வைத்தார்.

என்னுடைய அப்பாவின் மரணத்திற்குப் பின் “சொந்தமா தொழில் நடத்த எல்லாராலயும் முடியுமா?” “ஆழம் தெரியாம காலை விட்டா இப்படித்தான்”... என்பது போன்ற ஊராரின் விமர்சனங்கள் என் காதுபடவே விழுந்தன. இதன் பாதிப்பால் நன்றாகப் படித்து நான் அரசு வேலையில் பணிபுரியவேண்டும் என்பதுதான் என்னுடைய குடும்பத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனக்கும் மேலோட்டமாக இப்படியொரு சிந்தனை இருந்தாலும், என் உள்மனதில் ‘சொந்தமாகத்தான் நாம் தொழில் செய்து வெற்றிபெற வேண்டும்’ என்னும் வெறி, நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. ஆனால் இதை நான் யாரிடமும் வெளிப்படுத்தவே இல்லை.

சென்னைக்கு வந்து ‘தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக்கில்’, கணிப்பொறி அறிவியல் படித்தேன். அதற்கு முன்பே நான் பட்டப் படிப்பு முடித்திருந்ததால், மத்திய அரசு சார்ந்த ஓர் அரசுப் பணிக்கு விண்ணப்பித்தேன்.

1989-ல் குஜராத்தில் எந்திரவியல் துறையில் வேலைக்கான உத்தரவும் வந்துவிட்டது. இது நடக்கும் காலத்தில் தான் வி.பி.சிங் புதிய கட்சி தொடங்கினார். அரசுப் பணியில் சேர்வதற்கான பயணப்படியும் அளிக்கிறார்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் குடும்பத்தினர் என்னை வழியனுப்பி வைத்தனர். நான் பேருக்கு அங்கு போய் பணியில் சேர்ந்துவிட்டு, புதிய கட்சியின் தொடக்க விழாவுக்குச் சென்று பார்த்துவிட்டு ஊர் திரும்பி விட்டேன்.

நான் பிறந்த தமிழ்நாட்டில்தான் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. மொழி தெரியாத அந்த ஊரில் அரசுப் பணியாகவே இருந்தாலும் அதைத் தொடர்வதற்கு நான் விரும்பவில்லை. ‘தவிர்க்க இயலாத காரணத்தினால் பணியில் தொடர முடியாததற்கு வருந்துகிறேன்...’ என்று டெலிகிராம் கொடுத்து விட்டேன். என் குடும்பத்தினருக்குப் பெரிய அதிர்ச்சி. யாரும் என்னிடம் சரியாகப் பேசவில்லை. நானும் சென்னை வந்துவிட்டேன்.

சென்னையில் ஒரு சிறிய கணிப்பொறி சார்ந்த பொருள்களின் விற்பனை நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்தேன். தங்குவதற்கு இடம், என்னுடைய உணவுக்கு என்று அந்தச் சம்பளத்தில் வாழ்க்கை பெரிதும் கடினமாக இருந்தது. மதிய உணவு சாப்பிடுவதே பெரும் சாதனையாக இருந்த காலங்கள் அவை. இரண்டு வேளை மட்டுமே உணவு, ‘நடராஜா’ பயணம் என... ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அந்தப் பணியிலிருந்ததின் மூலம், ‘கணிப்பொறி சார்ந்த எந்த விஷயத்தை நாம் வியாபாரமாகச் செய்யமுடியும்?’ என்னும் தெளிவு கிடைத்தது.

89-90களில் கணிப்பொறி என்பது மிகவும் அரிதான, அதே சமயத்தில் விலை அதிகமுள்ள ஒரு சாதனமாக இருந்தது. வெகு சிலரே தமிழ் மென்பொருள்களை விற்பனை செய்துவந்தனர். அதன் விலை அன்றைக்கு 32 ஆயிரம் அளவுக்கு இருந்தது. ஆனால் தமிழ் மென்பொருளின் தேவை அதிகம் இருந்தது. எனவே தமிழ் மென்பொருளைத் தயாரித்து அதை மிகவும் குறைந்த விலையில் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

என்னுடைய இந்த யோசனையை, நான் கணிப்பொறி அறிவியல் படித்த இன்ஸ்டிடியூட்டின் ஆசிரியர் அலெக்ஸாண்டரிடம் சொன்னேன். அவரும் அதற்கு சந்தோஷமாகச் சம்மதித்தார். இருவரும் இணைந்தே ‘சாஃப்ட்வியூ’ என்னும் பெயரில் கணிப்பொறி நிறுவனத்தை சென்னை, நெல்சன்மாணிக்கம் சாலையில் 1990-ஆம் ஆண்டு ஒரேயொரு கணிப்பொறியுடன் தொடங்கினோம். அந்தச் சாலையில் தான் ‘நெல்சன் டைப் ஃபவுண்டரி’ இருந்தது எங்களுக்குப் பெரிய அடையாளமாக இருந்தது. நாங்கள் உருவாக்கிய தமிழ் மென்பொருளுக்கு ‘இன்ஸ்கிரிப்ட்’ என்று பெயர் வைத்தோம். அதை 950 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

தமிழ் மென்பொருளைத் தயாரிப்பது என்று முடிவானவுடன் அதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கேற்ற விளம்பரங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம். அன்றைக்கு தினசரிகளில் விளம்பரக் கட்டணம் மிக அதிகம். அப்போதுதான் எங்களின் முயற்சியைக் கேள்விப்பட்டு கடனில் ‘தினமணி’, ‘ஹிந்து’ போன்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்வதற்கு ‘லியோ அட்வர்டைஸிங்’ முதலாளி முன் வந்தார்.

அவ்வளவுதான் 950-க்கு தமிழ் மென்பொருள் கிடைக்கிறது என்றவுடன் தமிழ்நாடு முழுவதுமிருந்து எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. அறிமுகப்படுத்தும் போதே நாங்கள் 20 வகையான தமிழ் எழுத்துருக்களுடன் மென்பொருளைத் தயாரித்து பதிப்பகத் துறையில் இருப்பவர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் கவர்ந்தது. எங்களின் தொழில் படிப்படியாக வளர்ந்தது.

இந்தச் சமயத்தில்தான், என்னுடன் இணைந்த என் ஆசிரியர் அவருடைய சொந்த விருப்பத்தின் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்று குடியேறும் நிலை ஏற்பட்டது. தனியாளாக என்னுடைய ஊழியர்களுடன் இணைந்து போராட்டம் தொடர்ந்தது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் எங்களின் தமிழ் மென்பொருளுக்குப் பெரும் அங்கீகாரம் பரவலாகக் கிடைத்தது.

1995-ஆம் ஆண்டுதான் வாக்காளர் பட்டியல் முதன்முதலாக கணிப்பொறி மூலம் தயாரிக்கப்பட்டது. அதற்கான தனி மென்பொருளை நாங்கள் தயாரித்தோம். மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் அந்தந்த மாவட்டத்திலுள்ள அச்சகங்களுக்கு ஆர்டர்கள் தருவார்கள். வழக்கமாக மூன்று மாதகாலம் ஆகும் வேலையைப் பத்து நாள்களுக்குள் எங்களை அணுகிய அச்சகத்தாரர்களுக்கு முடித்துத் தரவே, ‘வேலை சீக்கிரம் முடிய சென்னைக்குப் போய் சாஃப்ட்வியூவை அணுகினால் போதும்’ என்னும் நிலைமை உருவானது.

இந்த வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியின் இடையில்தான் என்னுடைய திருமணமும் நடந்தது. மணப்பெண்ணை நான் பார்க்கக் கூட இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மிகப் பெரிய வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு முதன்மையாகத் தெரிந்தது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் அச்சக உரிமையாளர்களும் கணிப்பொறியை வாங்கிவிட்டு அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருப்பதைப் பார்த்தேன். கணிப்பொறி என்பது ஓர் ஆங்கிலச் சாதனம் என்னும் மாயை அவர்களிடையே இருந்தது தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணிப்பொறியை கையாளலாம் என்னும் நிலைமையைக் கொண்டு வர, கணிப்பொறி பயிற்சியை அளிக்கத் தொடங்கினேன்.

‘சாஃப்ட்வியூ கணிப்பொறி பயிலகம்’ என்று பெயர்ப்பலகையைப் பார்த்து, ‘கம்ப்யூட்டரை தமிழில் சொல்லிக் கொடுக்கப் போறாராம்... சரியான லூஸு!’ என்று என் காதுபடவே பேசினார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்த வில்லை. வாரத்தின் இறுதி நாள்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் அச்சக உரிமையாளர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். இந்தப் பயிற்சி மாவட்டந்தோறும் கணிப்பொறியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. ‘தினமணி’ வணிக மணி பகுதியிலும் என்னைப் பற்றி வெளிவந்த முகப்புக் கட்டுரையும் என்னை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. தமிழால் நான் உயர்ந்தேன்.

இந்தச் சமயத்தில்தான் தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை பெருகியது. அவர்களுக்குக் கணிப்பொறி சார்ந்த கிராஃபிக் டிசைனர்களின் தேவை அதிகம் இருந்தது. அதனால் ‘கிராஃபிக் டிசைனர்’ பயிற்சியைத் தொடங்கினேன். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் புகழ் தொலைக்காட்சிகளின் வழியாகவும் உலகம் முழுவதும் பரவியது. இன்றுக்கு சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 64 தனியுரிமை கிளைகளில் ஆண்டிற்கு 10 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். அதில் 25 சதவிகிதம் பேர் வேலை வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறி சார்ந்த நூல்களைத் தமிழிலேயே பதிப்பித்தும் வருகிறோம். இது தமிழ் வழியில் படிக்கு மாணவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றது.

உலகம் முழுவதும் கணிப்பொறியில் அதிகம் பயன்படும் 17ஆவது மொழியாகத் தமிழ் இருக்கிறது! தமிழைப் பொருளாதார மொழியாக மாற்றுவதற்கான என்னுடைய முயற்சியில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். இரண்டு பேரோடு தொடங்கிய சாஃப்ட்வியூவில் இன்றைக்கு 300 பேர் ஊழியர்களாக இருக்கின்றனர். ஆனாலும் இலக்கை எட்டிவிட்டதாக நான் நினைக்கவில்லை. அதற்கான பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!’’ என்றார்.

-ரவிக்குமார், தினமணி 11-11-2011


Tuesday, November 8, 2011

ஆரோக்கியம் தரும் யோகாக்கலை


உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் நீச்சல் என பல பயிற்சிகளை மீறி யோகாக்கலை உலகஅளவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. யோகா உடல்கலை இந்துத்தவத்தை அடக்கியுள்ளதேன பலரும் கூறினாலும் உலகமே தங்களுக்கு தேவை என ஏற்றுள்ளது. இந்தியாவில் பல கல்வி மையங்களிலும், தொழில்மையங்களிலும் யோகா கற்று தரப்படுகிறது. ஆனால் அரைகுறை யோகாவும் சில இடங்களில் இருக்கிறது. யோகவை வைத்து பணம் பறிக்கும் மையங்களும் பெருகிவருகின்றன. யோகாவை வள்ர்த்ததில் மிக முக்கியமானவர் 'பெங்களூரு சுந்தரம்' ஆவார். 'பெங்களூரு சுந்தரம்'யோகாவின் தந்தை என கூறவேண்டும். யோகா குறித்த பல ஆராய்ச்சி மற்றும் படைப்புகளையும் படைத்துள்ளார். 'பெங்களூரு சுந்தரம்'த யோகா பப்ளிஷிங் அவுஸ் என்ற பதிப்பகத்தையும் நிறுவி யோக குறித்த படைப்பு உலகம் முழுக்க பரவச் செய்தார். இந்த யோகா புத்தகங்கள் தான் உலகமொழிக்கே மூலமாக உள்ளது.

இந்த யேகா புத்தகங்களின் அதிகாரபூர்வ புத்தக டீலராக சென்னையில் சாப்ட்வியூ பதிப்பகம் இயங்கிவருகிறது. இங்கு விற்கப்படும் மதிப்புள்ள நூல்கள் பின்வருமாறு:

Sundra Yogic Therapy - English Book -Rs.295.00
Valipum Vanappum - Tamil Book -Rs.90.00
Shanthi Yogam - Tamil Book -Rs.125.00
Raja Yogam - Tamil Book -Rs.250.00
Aarokiya Vunavu - Tamil Book - Rs.75.00
Sundara Yoga Sikichai - Tamil Book - Rs.250.00
Surya Namaskaram - Tamil Book -Rs.20.00
Anantha Rahasyam Book with Tamil VCD - Rs.200.00
Sandhya Gayathri Japa Yogam - Tamil Book - Rs.75.00
Diet and Digestion - English Book - Rs.95.00
The Secret of Happiness with Yoga VCD -Rs.200.00
Yoga Chart - Rs. 45.00
Yoga VCd - Rs.130.00

யோகா நூல்கள் கிடைக்கும் முகவரி:
----------------------------------------------------------------------
சாப்ட்வியூ பதிப்பகம்
118. நெல்சன் மாணிக்கம் சாலை
சென்னை-29
தொலைபேசி: 044-23741054 / 9840738676

Friday, November 4, 2011

மெட்ராஸ் தமிழ் படிங்க வாத்தியாரே?



CHENNAI TAMIL DICTIONARY

அண்ணாத்தை – அண்ணன்
அய்ய – என்ன
அல்பம் -- கஞ்சன்
அல்பாயுசு -- குறைந்த ஆயுள்
அப்பால- அப்புறம்
அவுல் குடுக்குறது- ஏமாற்றுவது
அட்டு- சுமாரான
அம்டுகினியாசு -- மாட்டிக்கொண்டான்
அமுக்கிக்கோ – பேசாதே
அஸ்கு – வேண்டாம்
அப்பீட்டு- வெளியேறுதல்
ஆட்டிகினு -- நேரம் கடத்தல்
இப்பிடிகா- இந்த வழியாக
இட்டுனு- கூட்டிக்கொண்டு
இஸ்குல் -- பள்ளி
இஷ்துக்கினு -- காலம்கடத்தல், இழுத்தல்
ஊத்திகினு – குடித்துவிட்டு
எகிரு- வேகமாக ஓடு
ஒண்டியா – தனியாக
ஒத்து – தள்ளு
ஒரு தபா -- ஒரு தடவை
கம்னாட்டி -- துரோகி
கபாலுனு -- தீடீரென்று
கம்முனு -- அமைதி
கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
கலீஜ்- அசுத்தம்
கட்டு – சீட்டாட்டம்
கவ்ராதே -- ஏமாந்துவிடாதே
கன்பீஸ்-குழப்பம்
காவு – பழிவாங்கு
காண்டு- கோபம்
கஸ்மாலம்,கேனை-முட்டாள்
கில்பான்ஸ்- பளபளப்பான ஆள்
கில்லி- திறமையான ஆள்
கிச்சிலிக்கா – கூச்சம்
கீரான் – இருக்கிறான்
கிச்சிறுவேன் – அழித்துவிடுவேன்
கீது- இருக்கு
குந்திகினு -- அமர்ந்துகொண்டு
குஜால்ஸ்- கொஞ்சல்
குஜிலி- இளம்பெண்
கிருஷ்ணாயில்-மண்ணெண்ணெய்
குந்து-அமர்
கொசுறு -- சிறிய அளவிலான இலவசம்
கெயங்கு – கிழங்கு
கைத்து – கழுத்து
கேலிச்சுடேன் -- வெற்றிசூடல்
கைத -- கழுதை
சல்பேட்டா- மலிவுவிலை மது
சொக்கா – அழகாக
சோத்து கை – வலதுகை
சோமாரி-ஒழுக்கமற்றவன்ல
தவ்லவுண்டு -- கொஞ்சம்
தில்லு – தைரியம்
தேன்டகேசு – பயனற்றது
மாமு, மச்சி -- நண்பன்
மெய்யாலுமே – உண்மை
பன்னாடை -- பயனற்றவன்
பல்பு வுட்டுட்டான்- இறந்துட்டான்
பகிலு- இடுப்பு பகுதி
பலுப்பு -- குழாய்
பாடை -- மரணம்
புட்டுக்கிச்சு -- முடிந்தது
புட்டகேசு -- ஒழிந்தது
பீச்சாங்கை -- இடது கை
பிகிலு—விசில்
பீலா- பொய் சொல்வது
போங்கு- பொறாமை
பேஜார்- அறுவை
போதுக்கு – குண்டு
பையம் – பழம்
டகுள் -- பொய்
டர்- பயம்
டாவு -- காதலி
டுமீல்- பொய்
டொச்சு- அழகில்லா
டமாசு -- சிரிப்பு
வூட்டாண்ட-வீட்டிற்கு பக்கத்தில்
டப்பு-பணம்
மால், மாலு-கமிஷன்
மஜா-கேளிக்கை
மட்டை-போதையில் விழுந்து கிடப்பது
மெர்சல்-பயம்
சொக்கா-சட்டை
பீட்டர்- பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
தொங்குறது- ஒதுங்குதல்
டபாய்குறது- ஏமாற்றுதல்
டம்மி பீஸ்- ஒப்புக்கு சப்பாணி
மெரிச்சிருவேன்- மிதித்துவிடுவேன்
ஜகா வாங்குறது- பின்வாங்குவது
ஜலுப்பு – சளி
ஜல்பு- ஜலதோஷம்
ஜல்சா –சரசம்
ஸட – பயனற்ற

Wednesday, November 2, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாகிறது


திமுக தங்கம் தென்னரசுவின் மேற்பார்வையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசிய அளவில் பிரம்மாண்டமாக உருவானது. தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையான செய்தி பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமைனையாகியதை குறித்து இணையத்தில் பார்வையிடும் கருத்தை (நல்லதோ/கெட்டதோ) தொகுத்து வருகிறேன்.
-------------------------------------
தி.மு.க அரசால் சென்னையில் கட்டப்பட்டுள்ள பாலங்களை எல்லாம் சிறுவர்கள் ஸ்கேட்டிங் மைதானமாக மாற்றி விடலாம் (Kavi.Senkuttuvan)
-------------------------------------------------------------------------------------
தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்’ வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை (Dr.M.Karunanidhi)
-------------------------------------------------------------------------------------
ஆசியாவிலேயே பெரிய நூலகம் என்கிறீர்களே, எதை வைத்துக் கூறுகிறீர்கள்? அங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தா அல்லது நிலப்பரப்பை வைத்தா? அந்நூலகத்திற்கு ஒழுங்கான ஒரு வலைத்தளம் கூட இல்லையே! பிலோக்ஸ்போர்டில் வலைத்தளம் என்ற பெயரில் எதையோ செய்து வைத்திருக்கின்றனர். தளமும் தமிழில்லை. ஹில்லரி தமிழில் 'வணக்கம்' கூறினார் என்ற செய்தித் துணுக்கை மட்டும் படமாக இணைத்துள்ளனர். காண்க: http://annacentenarylibrary.blogspot.com (Elanjelian Venugopal)
-------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவுக்கு பகை கருணாநிதி மீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார். ’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார் (S.P.Agasthiyalingam)
-------------------------------------------------------------------------------------
நல்லவேளை நூலகத்தை பெருமாள் கோயிலாக மாற்றாமல் விட்டாரே புரட்சித்தலைவி அதற்காக மகிழ்வோம் (YuvaKrishna)
-------------------------------------------------------------------------------------
முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை. (Venkatesan, Writters Association)
-------------------------------------------------------------------------------------
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எல்லாம் மீண்டும் அதன் அதன் இடத்துக்கு வந்துவிடும். எல்லாம் நம் செலவில்தான்.(Sridharan)
-------------------------------------------------------------------------------------
முதன் முதலாக சென்னையில் குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஸஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது. இதை தாய்மார்கள் வரவேற்கிறார்கள். நானும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் (Aruna, Chennai Race Club)
-------------------------------------------------------------------------------------
முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள் (வைகோ மதிமுக)
-------------------------------------------------------------------------------------
அரசுக்கு மக்களின் நூலகப் பயன்பாட்டில் உண்மையில் அக்கறையிருந்தால்,அந்தப் பணத்தை நியாயமாகச் செலவிடவேண்டுமென்றால், தமிழகம் முழுவதும் பல ஊராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் பேணுவாறின்றி அலட்சியப்படுத்தப் பட்டுக் கிடக்கும் நூற்றுக்கணக்கான நூலகத்துறை நூலகங்களை மேற்பார்வையிட்டு மேம்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் படிப்பு ஆர்வத்திற்கு உதவி புரியலாம். இல்லையென்றால்
இது டம்பச் செலவே.(ஜி.ஸன்தானம்)
-------------------------------------------------------------------------------------
மருத்துவமனை கட்ட சென்னையில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டதை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் பலகோடி ரூபாய் செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக்கூடிய ஒன்று? (வீரமணி)
-------------------------------------------------------------------------------------
சமச்சீர் கல்வியில் கண்ட தோல்வியைத்தான் நூலக விஷயத்திலும் அரசு சந்திக்கும்: (மேலாண்மை பொன்னுச்சாமி)
-------------------------------------------------------------------------------------
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது (ராமதாஸ்,பாமக)
-------------------------------------------------------------------------------------
காழ்ப்பு அரசியல் அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறையை, ஜனநாயக நடைமுறையை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் அரசின் முடிவை கைவிட்டு, தற்போது உள்ள இடத்திலேயே நூலகம் தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் (ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )
-------------------------------------------------------------------------------------
கன்னிமாரா நூலகம், மவுண்ட்ரோடு தேவநேயப்பாவணர் நூலகங்கள் கிடக்கும் நிலையில் 500 கோடிக்கு இன்னோர் நூலகம் என்பதையாரும் கேட்கவில்லை. மேற்சொன்ன இரண்டு நூலகங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா நூலகங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி கிடையாது. அதே பணி புரியும் பெண்கள் நிலையோ பரிதாபம். ஆனால் 500 கோடிக்கு அதுவும் முன்பு இதே இடத்தை சட்டசபை ஆக்க கால்கோள் நடந்த இடத்தில் நூலகம் கட்டிய முன்னாள் முதல்வர் நல்லவர். இன்னாள் முதல்வர் கெட்டவர் (ராஜசங்கர்)
-------------------------------------------------------------------------------------
இந்த இடம் மாற்றம் நடந்தால் ஒரு முதல் தரமான நூலகத்தை இழப்போம் ஒரு மூன்றாம் தரமான மருத்துவமனையை பெறுவோம் Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
ஆப்பு அடிச்சுட்டு ஆப்படிச்சவரும் ஆறு மாசங் கழிச்சு மார்க் போடறேன்ன வரும் ஆசுபத்ரில கக்கூஸ் கழுவ ஒத்துகிட்டாங்களா? Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
அப்டியே மெரீனாவயும் வாய்க்கா மேடா அறிவிச்சு எல்லாரையும் காலைல அங்கயே கக்கா போகச் சொல்லிட்டா சோலி ஓவர் Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
குயின் மேரீஸ் காலேசுக் காரன் இப்பவே நெஞ்சப் புடிச்சுகிட்டு இருப்பான். அடுத்து ஒங்கிட்ட தான் வருதாம் ராசா Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
ஆங்.. அம்மா கேப்புடன் ஒரு காலேசு வச்சுருக்காரு உட்ராதிங்க அடுத்து காலேச கல் குவாரியா மாத்திரலாம் பசங்க கல் ஒடைக்கட்டும். #StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
புத்தகங்களின் மேல் அப்படி என்ன வெறுப்பு.. ? வாயசைக்கும் கூட்டம் உடனிருப்பதால் வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போனதோ? Twitter#StopJJSaveT
-------------------------------------------------------------------------------------
பெங்களூரு நீதிபதி அய்யா, இந்த அங்கவை இங்கவை அம்மையார கொஞ்ச நாள் ஜெயில்ல குந்தவைங்க. Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
நடிப்பு மட்டுமே தெரிந்தவருக்கு படிப்பு பற்றி தெரிய போவதில்லை. Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
இந்த நாலர வருஷம் முடியற வர தமிழர்களுக்கு ஏழரதான். Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
ஆமாம் சாமி போடும் "மங்குனி" அமைச்சர்கள் உதவியுடன், ஆட்டம் போடும் இம்சை "அரசி" 24 ம் புலிகேசி! Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
நம்பிக்கை ஒளி தமிழனுக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து வந்தால் தான் உண்டு
Twitter#stopJJsaveTN
-------------------------------------------------------------------------------------
நெப்போலியன் கூட படையெடுக்கும் நாட்டில் உள்ள நூலகங்களை அழிப்பதில்லை என்ற கொள்கை கொண்டவனாம்! #நீங்க எங்கயோ போயிட்டீங்க Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
கண்ணா லட்டு தின்ன ஆசையா? கனிமொழி விடுதலை. கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா? நூலகம்->மருத்துவமனை Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு ஒரு நூலகம்-அண்ணா
அண்ணா பெயரில் நூலகமே கூடாது‍-அம்மா Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
108 ஆம்புலன்ஸ் 109 ஆம்புலன்ஸாக மாற்றம், 109வது வாய்தா நிணைவாக Twitter#StopJJsaveTN
-------------------------------------------------------------------------------------
சமத்துவ புர‌ங்கள் இனி சத்துணவு கூடமாகுமா? Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் போல இந்த நூலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவரது பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திருப்பது பொருத்தமானது (Vijayakanth, DMDK)
-------------------------------------------------------------------------------------
மாநில அரசு என்பது முதலமைச்சர் என்ற தனிமனிதனின் ஆளுமையில்தான் நடக்கிறது என்பது உண்மை (S.Krishnamurthy)
-------------------------------------------------------------------------------------
கொள்கை அடிப்படையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கு உள்ளர்த்தம் கற்பிப்பது தேவையில்லாதது. இந்த மாற்றம் என்பது நாளைக்கே நடக்கப்போவதில்லை. டி.பி.ஐ வளாகத்தில் அறிவுப்பூங்கா வளாகம் கட்டப்பட்டனபின்னரே மாற்றப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்போது நூலகம் இயங்கத் தடையேதும் இல்லை. ஒராண்டுக்குமேலாக அது முழுவீச்சில் இயங்குவதாகத் தெரியவில்லை (Prof.Nagarajan)
-------------------------------------------------------------------------------------
அண்ணா நூலகத்தை இடமாற்றுவது அறிவு வளர்ச்சிக்கு எதிரான தமிழக முதல்வரின் மன நிலையைக் காட்டுகிறது (பெ.மணியரசன்)
-------------------------------------------------------------------------------------
8 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அதே இடத்தில் தொடர வேண்டும் (பிரின்ஸ் கஜேந்திர பாபு)
-------------------------------------------------------------------------------------